8. உங்க வீட்ல யார் யாரெல்லாம் நோன்பு?

"டிங் டாங்"

"குல்தும் யாருன்னு பாரு"

"ஏங்க என்னோட அம்மா, அப்பா, தம்பி வந்து இருக்காங்க.. பாருங்க.."

"வாங்க மாமா, வா முஸ்தபா. எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கோம் மாப்பிள்ளை. வேலை எல்லாம் எப்படி போகுது?"

"அல்ஹம்துலில்லாஹ்.. உங்க உடம்பு எப்படி இருக்கு மாமா?"

(இப்படியே சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். சிறிது கழித்து குல்தும் கேட்டாள்: ஏங்க நீங்க நாளைக்கு நோன்பா?

"பிறகு பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு தூங்க போய்விட்டான் சுல்தான். குல்துமின் முகம் கொஞ்சம் சுருங்கித்தான் போய்விட்டது. தனது தம்பியை பார்த்து,

"டேய் முஸ்தபா,  நாளை சஹருக்கு சாப்பாடு வைக்கவா?"

"நான் ஸ்லிம்மாதானே இருக்கேன்.. நான் நோன்பு இல்ல.." என்றான் முஸ்தபா.

"ஏன்டா வைச்சா குறைஞ்சு போயிடுவியா? என்றாள் குல்தும்.

"நீதான் கொஞ்சம் சதையெல்லாம் போட்டிருக்க நீ கண்டிப்பா நோன்பு வைச்சே ஆகணும், 30 நாளு இல்ல 90 நாளு அப்பத்தான் உனக்கு வெயிட்டு முழுசா குறையும்." என்றான் நக்கலாக.

குல்தும் அம்மா இடைமறித்து "டேய் முஸ்தபா.. நீ வைக்குறீன்னா வை.. உன் அக்காவ ஏன்டா கிண்டல் பண்ற.."

குல்தும் விடவில்லை, "தம்பி, நோன்பு வக்குறது நம்ம மேல கடமைடா.. இன்னும் எத்தன நாளு இப்படி விளையாட்டுதனமா இருப்ப?"

"குல்தும். உனக்கு விருப்பம் இருந்தா நீ வை. எனக்கு இஷ்டம் இல்ல... எனக்கு எப்ப இஷ்டம் வருதோ அப்ப பாக்கலாம்.."

"குல்தும்  விடும்மா.. இப்பதான் கேம்பசுல செலக்ட் ஆகி நல்ல கம்பனில்ல பிளேஸ் ஆகியிருக்கான். நோன்பல்லாம் வைச்சுகிட்டா எப்படி வேலை பன்ன முடியும்?" என்றாள் குல்தும் அம்மா.

குல்தும் விடவில்லை.. "ஏன் முடியாது? மொட்ட வெயில்ல சோறு தண்ணி இல்லாம கிரிக்கட் எல்லாம் கலையில இருந்து சாயந்தரம் வரைக்கும் விளையாட முடியுது, வெறும் வயித்துல வேலை செய்ய முடியாதா?"

பொறுமையிழந்து குல்தும் அப்பா சொன்னார்: "ஏன் குல்தும் அவன டார்ச்சர் பண்ணுற.. நீ என்ன இத்தனை நாளு நோன்பு வச்சியா? திடீருன்னு என்ன புது பழக்கம்? முதல்ல உன் வீட்ல உன்னோட புருஷனே நோன்பு வைக்கல.. சின்ன பையன் அவன போய் டார்ச்சர் பணிக்கிட்டு இருக்க.. போ போய் தூங்கு.. சீக்கிரம் எந்திரிகனும்ல..  நீ மட்டும்தான் நாளைக்கு நோன்பு. போன தடவ மாதிரிசஹருக்கு தூங்கிட்டு பட்னியா எல்லாம் நோன்பு வைக்காத.."

சுருக்கென்று இருந்தது குல்துமுக்கு.. "சரிப்பா நான் தூங்க போறேன், நீங்க படுத்து தூங்குங்க" என்று இடத்தை காலி செய்தாள்.

"ம்ம்.. வர வர இந்த பிள்ளைங்களுக்கு என்ன ஆகுதுன்னே தெரிய மாட்டேன்குது.. 5 வேளை தொழுதே ஆகனும், 30 நாள் முழுசும் நோன்பு வைச்சே ஆகனும் அப்படீன்னு பிடிவாதம் வர ஆரம்பிச்சுருச்சு..அப்பறம் நம்மகிட்டயே வந்து அத பண்ணனும் அது ஹலால், இத பண்ணக் கூடாது இது ஹராம் அப்படி, இப்படீன்னு நமக்கே வந்து பயான் பண்ணுறாங்க..

சர்தான்.. தொழுவுற, நோன்பு வைக்குற பயலுக எல்லாம் அப்படியே ஒழுங்காவா இருக்கனுங்க.. வர வர ரொம்ப ஓவராதான் போறாங்க..."

"அட.. நீங்க மறுபடி ஆரம்பிச்சுடீங்களா.. படுத்து தூங்குங்க.."- இது குல்தும் அம்மா பரீதா.

...........

படுக்கையில் குல்துமிற்கு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தாள். குல்துமின் காதுகளில் அந்த குரான் வசனம் ஓடிகொண்டே இருந்தது.

'காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும் உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர'
-குர்ஆன் 103:1,2,3