9. அழகிய பிரார்த்தனை

அதிகாலை 4 மணி.

குல்தும் எழுந்து சால்னாவையும், சாதத்தையும் சுட வைத்தாள்.  சிக்கன் கேரேவி இருந்தும் சாப்பிட ஆர்வம் இல்லாமல் "தேமே" என்று விழுங்கிக் கொண்டு இருந்தாள். ஆம் வீட்டில் இத்தனை பேர் இருந்தும் எத்தனை நாள்தான் தனியாக  எழுந்து நோன்பு வைப்பது? இருந்தாலும் "அல்ஹம்துலில்லாஹ்" என்று அவளாகவே சொல்லிக் கொண்டாள்.  அல்ஹம்துலில்லாஹ்  என்றால், "அல்லாஹ் போதுமானவன்" என்று அர்த்தம்.

எப்பொழுது எல்லாம் மனகஷ்டம் மேலிடுகிறதோ அப்பொழுதெல்லாம் இறைவன் பக்கம் திரும்புவது நம்பிக்கையாளர்களுக்கு பலன் தரும் ஆகவே குரானை படிக்கலாம் என  தனது மொபைலை எடுத்தாள். அதில் உள்ள தமிழ் குரானை வாய்சை அழுத்தினாள். முதல் வசனமே அவளுடைய மனதிற்கு ஆறுதலாக இருந்தது;
(இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், தான தர்மங்கள் செய்வோராகவும், ஸஹர் நேரத்தில் மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர். (3:17)

உடனே கண்களை மூடி திருக்குரானில் அல்லாஹ் கற்றுத்தந்த பிரார்த்தனைகளை கேட்க்க ஆரம்பித்தாள்:

# (“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக!எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!” (14:40) “எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக”. (14:41) 

# “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) (3:8) 

# “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக!
(இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.(46:15)

சுபுஹ் தொழுதுவிட்டு எல்லோரையும் எழுப்பிவிட்டு எல்லோருக்காகவும் டீ தயாரித்துக் கொண்டிருந்தாள். "ட்ரிங்.. ட்ரிங்" - குல்துமின் போன் ஒலித்தது எடுத்து அட்டண்ட் செய்தாள், எதிர் முனையில் தோழி பல்கீஸ்.

"அஸ்ஸலாமு அலைக்கும் குல்தும் எப்படி இருக்கீங்க.. உங்க அம்மா வந்து இருக்காங்களா? நான் உங்க வீட்டுக்கு போனத பார்த்தேன்,"

"ஆமா பல்கீஸ்"

"இன்னைக்கு 10 மணிக்கு ஹல்கா இருக்கு. அவுங்களயும் அழைச்சுட்டு வர முடியுமா? இன்னைக்கு ருக்கையா அக்கா வராங்க.."

"ம்ம். இன்ஷா அல்லாஹ்" என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் குல்தும்.

 மனதுக்குள் அவளாகவே சொல்லிக் கொண்டாள், "அல்ஹம்துலில்லாஹ்!"